உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்குக் 50% இட ஒதுக்கீடு இல்லை... துரோகம் செய்த முதல்வர், பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை : போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன்  இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மாணவர்களின் கனவினை சிதைத்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பா.ஜ.க. அரசின் இந்தச் சமூகநீதித் துரோகத்திற்குத் துணை போகும் வகையில் - பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும் - அதற்கான விளம்பரங்களிலும் நேரத்தைச் செலவிட்ட முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள், மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை.

போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன்  இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: