×

மோட்டார் வாகன சேவை அளிக்க மாநில அரசின் உரிமம் கட்டாயம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்!!

டெல்லி : மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019-இன் தேவைகள் மற்றும் விதிகளின் படியும், மோட்டார் வாகன சட்டம் 1988-இன் திருத்தப்பட்ட பிரிவு 93-இன் படியும், மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் 2020-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்காகவும், வாகனங்களைப் பகிர்ந்து கொள்வதை முறைப்படுத்துவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, மோட்டார் வாகன சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்கு மாநில அரசின் உரிமம் பெறுவது கட்டாயமாகும். இத்தொழிலில் இருப்பவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றலாம்.

வாகன சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்வதற்காக, ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குமாறு மாநில அரசுகளை இந்த வழிகாட்டுதல்கள் கோருகின்றன.
வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் குறித்த விதிமுறைகளும், சேவைக்கான கட்டணங்கள், ஓட்டுநர்களின் நலன், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், வாகனங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றையும் இந்த வழிகாட்டுதல்கள் கவனத்தில் கொள்கின்றன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கோரியுள்ளது.

Tags : State government ,Ministry of Highways , Motor, Vehicle Service, License
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...