×

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம் : மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு!!

புதுக்கோட்டை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மத்திய  சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வழங்கிய விருதை புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார். பொதுவாக
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த 5 முறை மத்திய அரசிடமிருந்து விருதை பெற்று வருகிறது.

இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதை தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வழங்கினார். புதுக்கோட்டையில் இருந்து காணொலி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று காலத்திலும் நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu , Organ Transplant Surgery, Tamil Nadu, Central Government, Award
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...