×

5 ஆண்டுக்குப் பிறகு புதுச்சேரியில் ஒரே நாளில் 30.35 செ.மீ. மழை

புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயலையொட்டி விடிய, விடிய காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே நாளில் 30.35 செ.மீ மழை பெய்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இது, அதிகபட்ச மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி அடுத்த மரக்காணம் அருகே நிவர் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. இதையொட்டி, புதுச்சேரியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. புயல் கரையை கடந்ததையொட்டி இரவில் தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 30.35 ெச.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2015ல் இதே அளவு மழை இருந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்குப்பிறகு அதிகபட்ச மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புயலையொட்டி புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் மதியம் முதலும், நகரில் மாலை முதலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம், நேற்றும் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரில் புதைமின்வடம் அமைந்துள்ள பகுதிகளில் புயல் கரையை கடக்கும் நேரமான இரவு 10 மணி முதல் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் நேற்று காலை 8 மணிக்கு மின்விநியோகம் சீரானது. இருப்பினும், கிராமம், நகரங்களில் பல பகுதிகளில் மின்விநியோகம் மாலை வரையிலும் சீராகவில்லை.

Tags : Pondicherry , After 5 years 30.35 cm Rain in a single day in Pondicherry.
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...