தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் கேரளா, பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சட்டங்களை எதிர்த்தும், தொழிலாளர்கள், மக்களுக்கு எதிராக இதர நடவடிக்கைகளை கண்டித்தும், நேற்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை 10 தேசிய தொழிலாளர் சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி, நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதில், வங்கிகள், தபால் துறை உட்பட மத்திய, மாநில துறை ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் என 25 கோடி பேர் பங்கேற்றனர். எனிலும், இப்போராட்டத்துக்கு பாஜ.வின் இந்து மஸ்தூர் சபா ஆதரவு அளிக்கவில்லை. கேரளா, ஒடிசா, அசாம், தெலங்கானா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், திரிபுரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த போராட்டம் முழு வெற்றி பெற்றதாக, இந்த தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது. போக்குவரத்து செயல்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

இதனால், இந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் பாஜ.வின் பிஎம்எஸ் தவிர சிஐடியு, ஐஎன்டியுசி, எஐடியுசி உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்று இரவு 12 மணிவரை வேலை நிறுத்தம் நடந்தது. இதனால், கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சி என பொது வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட பெரும்பாலான இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. சாலைகளில் தனியார் வாகனங்களும் குறைவாகவே ஓடின. ரயில்கள், விமானங்கள் வழக்கம்ேபால் இயங்கின.

Related Stories: