ஆம் ஆத்மி கட்சி 8ம் ஆண்டு தினம் மக்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்: தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

புதுடெல்லி: அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின்னர் அதிலிருந்து வெளியேறி 2012ம் ஆண்டு நவம்பர் 26ல் ஆம் ஆத்மி கட்சியை இப்போது டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி தன்னை தேசிய அமைப்பாளராக அறிவித்துக் கொண்டார். ஆம் ஆத்மி கட்சியின் 8ம் ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கபப்ட்டது. கொரோனா மிரட்டல் காரணமாக கட்சி துவக்க தினம் ஆடம்பரமின்றி, கும்பல் கூடாமல் எளிமையாக நடைபெற்றது. தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் டுவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் கூறியிருப்பது: எட்டாம் ஆண்டு தினத்தில் தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாடு மற்றும் மனித நேயம் தற்போது கடுமையான கட்டத்தில் உள்ளது. இந்த சமயத்தில் எந்த ஒரு பிரச்னையையும் அரசியலாக்கி ஆதாயம் பார்பது முறையற்றது.

மக்களுக்கு சேவை செய்வதில் பாரபட்சம் கருதாமல், தன்னலம் பார்க்காமலும் அனைவருக்கும் கட்சித் தொண்டர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். மாஸ்க் விநியோகம் செய்யுங்கள். தொற்று பாதித்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். பசியில் வாடுபவர்களுக்கு உணவு அளியுங்கள்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories: