இந்தியாவின் 4 பெரிய நகரங்களில் டெல்லியில்தான் கொரோனா பலி மிகவும் குறைவு: அமைச்சர் ஜெயின் புள்ளிவிவரம்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பும் அதிகமாக இருந்தாலும், 10 லட்சம் ஜனத்தொகை அடிப்படையில் நாட்டின் 4 பெரிய நகரங்களில் டெல்லியில் தான் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.கொரோனா இறப்பு டெல்லியில் செவ்வாய் கிழமை 109 எண்ணிக்கையில் இருந்தது. தொடர்ந்து 5வது நாளாக இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. திங்கள் செவ்வாய் கிழமைகளில் தலா 121, சனியன்று 111, வெள்ளிக்கிழமை 118, மற்றும் 18ம் தேதி 131 (இதுவரையிலான அதிகபட்சம்) என இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு நபர்கள் அண்டை மாநில பயிர்க்கழிவு எரிப்பு புகை, குளிர் கால பனியின் தாக்கம், காற்று மாசு போன்ற பிரச்னைகளை சந்திப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகம் என வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனிடையே, மருத்துவமனைகளில் ஐசியு படுக்கை மற்றும் வென்ட்டிலேட்டர் வசதி கொண்ட ஐசியு படுக்கைகளை ஆம் ஆத்மி அரசும், மத்திய அரசும் டெல்லியில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் டுவிட்டரில் கொரோனா  இறப்பு எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்துடன் மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பகிர்ந்துள்ள தகவலில், 10 லட்சம் மக்கள் தொகை கணக்கீட்டில் நாட்டின் 4 மெட்ரோ நகரங்களில் டெல்லியில் தான் குறைவு என பதிவு செய்துள்ளார். டிவிட்டர் தகவலில் ஜெயின் கூறியிருப்பது: பத்து லட்சம் பேருக்கு மும்பையில் 860, கொல்கத்தாவில் 562, சென்னையில் 538 என இறப்பு பதிவாகி உள்ளது. டெல்லியில் அதே 10 லட்சத்துக்கு இறப்பு 435 தான். 4 மெட்ரோ நகரங்களில் டெல்லியில் கொரோனா பலி குறைவாகும். மக்களின் உயிரை காப்பாற்ற தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மிகச் சிறப்பாக அர்ப்பணித்து வருகிறோம். இவ்வாறு ஜெயின் தகவல் பதிவேற்றி உள்ளார். யானம், புனே, நாக்பூர், சாங்லி, ராய்காட், சதாரா, புதுச்சேரி, தானே என பிற நகரங்களின் பலி எண்ணிக்கையையும் பதிவேற்றி உள்ள ஜெயின், புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி அதில் குறிப்பிடவில்லை

Related Stories: