புதுடெல்லி:கொரோனா தொற்று முதல் அலை ஜூன் மாதம் வரை டெல்லியில் ஒருவித தீவிரத்தை உருவாக்கி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. அதன் பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா களமிறங்கியதில் நிலமை கட்டுக்குள் வந்தது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததை அடுத்து, டெல்லி மாடல் வெற்றி பெற்றுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அந்த பூரிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தகர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டி மிரட்டியது. பாதிப்பு 4,000 வரை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கொரோனா 2ம் அலை வீசுகிறது, இன்னும் சில நாட்களில் குறையும் என மாநில சுகாதார அமைச்சர் ஜெயின் கூறினார்.
அதன்படி நிலைமையின் தீவிரமும் குறைந்தது. எனினும், அடுத்த ஓரிரு வாரங்களில் அதாவது அக்டோபர் 28ம் தேதியன்று பாதிப்பு எண்ணிக்கை 5,000க்கும் அதிகம் சென்றதால், 3ம் அலை தொடங்கியுள்ளது என முதல்வர் கெஜ்ரிவல் அறிவித்தார். மூன்றாவது அலையில், இதுவரை இல்லாத வகையில் 8,593 பேர் 11ம் தேதி பாதிக்கப்பட்டனர்.