×

புயல் பாதிப்பு நிவாரணமாக 5000 வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மழை, வெள்ளம், புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ரொக்க நிவாரணமாக 5000 வழங்கிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவர் புயலால் மழை பாதிப்பிற்கு உள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். இரண்டாம் நாளான நேற்று சென்னை ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை நேற்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்னும் இந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதே நிலையில் தான் நீடிக்கிறது. குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள் மட்டுமின்றி-தாழ்வான பகுதிகள்- முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், “எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை” என்று மலையளவு பொய்யை மனம் கூசாமல் முதல்வரும்-அதிமுக அமைச்சர்களும் கூறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.  2015 பெருவெள்ளத்தின் போது அதிமுக அரசின் தோல்விகள் பற்றி தனியாக சி.ஏ.ஜி. ஒரு அறிக்கையே கொடுத்தது. மார்ச் 2016-ல் அளித்த அறிக்கையை இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்றத்திலேயே வைக்காமல், ஒளித்து வைத்திருந்தது அதிமுக அரசு. இறுதியில் நான் கேள்வி எழுப்பிய பிறகு தான், ஜூலை 2018-ல் இந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைத்தது. பெருவெள்ளத்தைக் கையாளுவதில் அதிமுக அரசுக்கு எப்போதும் அலட்சியம்-மெத்தனப் போக்கு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

அந்த அறிக்கையில்  சொல்லப்பட்ட குறைகளை-எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை,  இன்றளவும் அதிமுக அரசு களையவுமில்லை; கடைப்பிடிக்கவுமில்லை; பெருவெள்ளத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் செவிமடுத்து, நடைமுறைப்படுத்தவில்லை. சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையிலும்-மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையிலும் வெள்ளத் தடுப்பிற்காக-மழைநீர்க் கால்வாய்களுக்காக-மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் ‘ஸ்மார்ட் சிட்டி’  திட்டங்களுக்காக ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி என எதிலும் “கமிஷன்” அடிப்பது எப்படி என்பதில் மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கவனம் செலுத்தினாரே தவிர, சென்னை மாநகரத்தைப் பற்றி அவர் துளிகூட கவலைப்படவில்லை. அதை முதல்வர் பழனிசாமியும் எப்போதும் போல் கண்டு கொள்ளவில்லை.
 நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து-இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக  5000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்றும், வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு-வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்  என்றும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுதவிர காவிரி டெல்டாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயம் இன்னும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. நிவர் புயல் காரணமாக இரு தினங்களில் பதிவு செய்யுங்கள் என்று அரசுத் தரப்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட கெடுவை மறுபரிசீலனை செய்து-நவம்பர் 30ம் தேதி வரை பயிர்க் காப்பீடு கட்டணம் செலுத்தலாம் என்று நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் கஜா புயல், 2015 பெரு வெள்ளம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல்,  இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும்  கைவிடும் நோக்கில், அதிமுக அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin , 5000 to be provided as storm relief: MK Stalin insists
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...