வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் ஐஐடி மற்றும் என்ஐடி நிறுவனங்களில் தாய்மொழியில் பொறியியல் கல்வி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியிலேயே கல்வி பெறுவதற்காக புதிய தேசிய கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஐஐடி மற்றும் என்ஐடியில் தாய்மொழியில் பொறியியல் கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கல்வியை, குறிப்பாக பொறியியல் படிப்புகளை தாய்மொழியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் தாய்மொழி வழி கல்வி தொடங்கும். இதற்காக ஆரம்பகட்டமாக சில ஐஐடி மற்றும் என்ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் பொறியியல் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு ஐஐடி மற்றும் என்ஐடிகளில் தாய்மொழி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: