×

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை..!! செலவுகள் பெருமளவில் மிச்சமாகும்; பிரதமர் மோடி உரை

டெல்லி: நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி காணொலி மூலம் பேசி வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல என்றும் அது இந்தியாவின் தேவை என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, “ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே மார்க்கெட், ஆர்ட்டிகிள் 370 ரத்து” என பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், நாட்டை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் அடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக, பொது சிவில் சட்டத்தை அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி, “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து பேசியிருப்பதன் மூலம், மத்திய அரசின் நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 26 நவம்பர் 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று நடந்த அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் போது, மக்களவை, மாநிலங்களை, சட்டமங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களவை, சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கு ஒற்றை வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மேலும் பல்வேறு சமயங்களில் தனித்தனி பட்டியல்கள் வெளியிடுவது வீண் செலவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை பரப்ப புதுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மாநாட்டின் தலைமை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் ஒரு சிறப்பு அம்சம் கடமைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தான். மகாத்மா காந்தி உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்புகளைக் கண்டார்.” என்று அவர் மேலும் கூறினார். இந்நிலையில் அவர் கூறிய ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமானால், தேர்தலுக்கான செலவுகள் பெருமளவில் மிச்சமாவதோடு, அரசு மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என்பதால், இதற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,country ,election ,Modi ,speech , India needs one country, one election .. !! The costs are largely negligible; Prime Minister Modi's speech
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!