×

மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு : புயலால் வெறிச்சோடியது ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் நான்காம் நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலால் பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசியது. பாம்பன் கடல் கொந்தளிப்பாகவும் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. வடக்கிலிருந்து தென்கடல் பகுதிக்கு செல்லும் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகள் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் தங்களது படகுகளை குந்துக்கால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம், பாம்பன் உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் நான்காம் நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் ரூ.300 கோடிக்கும் அதிகமான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்றும் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் மட்டமும் உயர்ந்துள்ளது. கரையை நோக்கி வரும் புயலின் தூரம் குறைந்து வரும் நிலையில், ராமேஸ்வரம், பாம்பன் சுற்றுவட்டப்பகுதிகள் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் வந்து சென்ற நிலையில் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வருவது முற்றிலும் குறைந்து விட்டது.

Tags : Fishermen ,sea ,storm ,Rameswaram , Fishermen, on the 4th day, did not go to sea, Rs 300 crore, fish trade
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்