×

பரமக்குடி பகுதியில் கார்த்திகை தீப விளக்குகள் அமோக விற்பனை

பரமக்குடி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, பரமக்குடி பகுதியில் விருதாச்சலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் கொண்டாடும் வண்ணமயமான விழா கார்த்திகை தீப திருநாள் விழா. ஒளி வழிபாடாக நடைபெறும் இந்த விழாவன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனால் தீப திருநாள் காலத்தில் அகல் விற்பனை அமோகமாக நடைபெறும். கடந்த காலங்களில் மண்ணால் ஆன அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் மக்களின் ரசனைக்கு ஏற்ப பீங்கான் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பரமக்குடி ஐந்துமுனை சாலையில், சிவன், பெருமாள், அம்மன், துளசிமாட விளக்கு என பல்வேறு உருவங்களை கொண்டு 150க்கும் மேற்பட்ட வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் பரமக்குடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அகல் விளக்குகள் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘நான் விருத்தாசலம் பகுதியில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறேன். தற்போது விற்பனை அமோகமாக உள்ளது. என்னிடம் தேங்காய், மாம்பழம், தாமரை, துளசி மாடம், இலை வடிவம், ஸ்டார் வடிவம், விநாயகர் கைகளில் ஏந்திய அகல் வடிவம், மூன்று முகம், நான்முகம், ஐந்துமுகம், பன்முகம் என பல்வேறு வடிவங்களில், பல அளவுகளில் தேவைக்கு ஏற்ப அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளது’’என்றார்.

Tags : Karthika ,area ,Paramakudi , Paramakudi, Karthika, lamp, amoka sale
× RELATED பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த...