கொரோனாவால் வேலையிழந்த தந்தை குடும்ப வறுமையை விரட்ட டீ விற்கும் பள்ளி மாணவன்

திருமங்கலம்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பலரும் வாழ்வாதரம் இழந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தங்கநகை பட்டறையில் கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு மகள், மகன் உள்ளனர். மகன் ராகுல்(13). திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8ம் மாதத்திற்கு மேலாக பாலகிருஷ்ணணுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழ்நிலை உருவானது. இதனால் பாலகிருஷ்ணன் வீட்டு தேவை செலவிற்கு கடன் வாங்கத்துவங்கியுள்ளார். இது மாணவன் ராகுலை பெரிதும் பாதித்துள்ளது. தாயின் யோசனைபடி வீட்டில் டீ தயாரித்து அதனை சைக்கிளில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் சென்று டீ விற்பனை செய்ய துவங்கினார்.

இந்தநிலையில் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு துவங்கியதால் காலை வேளையில் ராகுலால் டீ விற்பனை செய்யமுடியவில்லை. இதனால் மதியம் 1 மணி முதல் மாலை வரையில் தற்போது டீ விற்றுவருகிறார்.ஒரு பக்கம் ஆன்லைன் வகுப்பு மற்றொரு பக்கம் டீ விற்பனை என ராகுல் பம்பரமாக சுழன்று வருகிறார். டீ விற்பனை மூலமாக தினசரி 200 முதல் 300 ரூபாய் வரை கிடைக்கும் வருவாயை தாயிடம் கொடுத்து தன்னால் குடும்பத்திற்கு வருவாயை ஈட்டி வருகிறார். பள்ளி மாணவனின் குடும்பத்திற்கு உதவ தன்னார்வலர்களும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Related Stories: