ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்: கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.!!!

டெல்லி: கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா(60) நேற்று காலமானார். உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் என்று டியாகோ மாரடோனா பெருமை பெற்றவர். 1986-ம் ஆண்டில் அர்ஜன்டினா அணிக்குத் தலைமை ஏற்று உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்தார். மொத்தம் 4 உலகக் கோப்பைகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.  

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த மாரடோனா 1997-ம் ஆண்டு ஓய்வுபெற்று, 2008-2010-ம் ஆண்டில் அர்ஜண்டினா அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். இதற்கிடையே, மாரடோனாவுக்கு மூளையில் இரத்த உறைவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரத்தில் இதற்காக அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

டியாகோ மரடோனா மறைவு அர்ஜண்டினாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #DiegoMaradona #RIP Legend #Argentina #HandofGod ஹொஷ்டெக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டியாகோ மரடோனா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், டியாகோ மரடோனா கால்பந்தின் மேஸ்ட்ரோவாக இருந்தார், அவர் உலகளாவிய பிரபலத்தை அனுபவித்தார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் கால்பந்து மைதானத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை எங்களுக்குக் கொடுத்தார். அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: