நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று பிற்பகல் கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி: துணை முதல்வர் ஓ.பி.எஸ் சென்னையில் ஆய்வு.!!!

சென்னை: நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உலுப்பெற்றது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையே, நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செ.மீட்டரும், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 27.8 செ. மீட்டரும், கடலூரில் 27.5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 100 கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்கிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார். மேலும், இன்று காலை முடிச்சூர், வேளச்சேரி பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிடுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பாரதிநகர், தரமணி உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார்.

Related Stories: