செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 1,500 கனஅடியாக குறைப்பு: நீர்வரத்து குறைந்ததால் நடவடிக்கை.!!!

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

தற்போது, வடகிழக்குப் பருவமழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடந்து அதிகரித்து ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஏரியின் நீர்மட்டம் 22.00 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர் வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். இதன்படி, நேற்று 22.00 அடியை நெருங்குவதாலும் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் பிற்பகல் 12.00 மணியளவில்1,000 கன அடி திறக்கப்பட்டது.

நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை பொழிவு மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை ஆபத்தும் ஏதுமின்றி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, நேற்று இரவு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கனஅடியில் இருந்து 4,371 கனஅடியாக குறைந்துள்ளதால் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காலை 5,000 கனஅடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 1,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் நீர்மட்டம் தற்போது 21.85 அடியாக உள்ளது.

Related Stories: