சென்னை: சென்னையில் கடலோர காவல் படை சார்பில் 100 வீரர்களும், ராணுவம் சார்பில் 12 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகளுக்கான கப்பல்கள், ஹெலிகாப்டர், விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவம், கடற்கரை, கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவம் சார்பில் 20 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 குழுக்களும், புதுச்சேரியில் 8 குழுக்களும், திருச்சியிலும் 6 குழுக்களும், பெங்களுரூவில் 8 குழுக்களும், கோவையில் 2 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவத்தின் தென் பிராந்தியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.