கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கு இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று முதல் 28ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூன்று நாட்களில் இருந்து 6 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை ஆறு நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். மேலும், டிசம்பர் 15ம் தேதி முதல் நகர்வு மற்றும் இரண்டாம் கட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு இணையவழியில் நடக்கும். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.