புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயலையொட்டி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடைகள், தொழிற்சாலைகள் அடைப்பால் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயலையொட்டி புதுச்சேரி கடல் நேற்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலை வீசியது. கடற்கரை சாலைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. அரசு உத்தரவின் பேரில் கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. புதுச்சேரியில் 196 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் அதிகரித்தால் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனவும், தலைமை மின்துறை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் மின்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.