தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளன எனவும் கூறினார். வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்துவருகிறது.  அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

முட்டி அளவுக்கு தண்ணீரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் எது சாக்கடை தண்ணீர் எது என தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ள நீர் அதிகமாக அதிகமாக மக்கள் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவர் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து 1.33 லட்சம் மக்கள் 1,516 நிவாரண முகாம்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் புயல் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்திய கப்பல் படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது. புயல் கரையை கடந்து விட்டது என அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிவராத்திரி அன்று மக்கள் கவனத்துடன் இருப்பதை போல் இன்று மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: