×

பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

* மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு
* மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் எச்சரிக்கையையொட்டி காற்று துவங்கியவுடன் மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் கரையை கடந்த பின்னர் எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் அந்த பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சாரம் நிறுத்தப்பட்டு மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டன. புயல் கரையை கடக்கும் பட்சத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையைடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருட்டை சமாளிப்பதற்காக கடைகளில் மெழுகுவர்த்தி வாங்குவதற்காக அதிக அளவில் நேற்று படையெடுத்தனர். இதன் காரணமாக பெரும்பாலான கடைகளில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு என்பது ஏற்பட்டது.

குடிசைகளில் வசித்து வரும் ஏழை எளிய பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கு எரியவும், விறகு அடுப்பு பற்ற வைப்பதற்கும் மண்ணெண்ணெய் என்பது அவசியம் என்பதால் ரேஷன் கடைகளில் அதனை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நேற்று காத்திருந்து பெற்றுச் சென்றனர். மண்ணெண்ணெய் பங்க் உட்பட பல்வேறு ரேஷன் கடைகளில் பொது மக்கள் மண்ணெண்ணெயை பெற்றுச்சென்றனர். இதுமட்டுமின்றி மளிகை பொருட்களும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளுக்கு தேவையான மைதா, ரவா, கோதுமை மாவு சமையல் எண்ணெய்,

சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மளிகை கடைகளுக்கு குவிந்தனர். பால் மற்றும் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பால்பவுடர்களையும், காய்கறிகளையும் வாங்கி இருப்பு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : stores , People crowded in stores to buy goods
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...