'புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்கும்”; புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து தற்போது நிவர் புயலாக மாறியுள்ளது. அந்த புயல் புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 120 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 250 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் புயல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்; 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும்.

நிவர் புயல் நகர்ந்து வரும் பாதையில் எந்த மாற்றமும் இல்லை; புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தற்போது நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதன் காரணகாவே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி மட்டுமே 150 கி.மீ  விட்டம் கொண்டது. நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும். நிவர் புயல் காரணமாக கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 13 முதல் 23 அடி வரை ராட்சத அலைகள் எழும்பும்.

குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். நிவர் புயல் கரையைக் கடந்தபின் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

Related Stories: