நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் வருகை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்..!!

சென்னை: நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார். வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து, ‘நிவர்’ புயலால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர் குழுக்கள் தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. மேலும் புயல் பாதிப்பின் போது தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தற்போது சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகளுக்காக 8 ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கடலோர காவல்படை, கப்பல் படை, ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: