ஈரோடு: ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு திண்டல் அருகே ஜீவா நகர் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஜீவா நகரில் இருந்து ரிங் ரோட்டை இணைக்கும் சாலை செல்வதால், திண்டல் பகுதியிலிருந்து ரிங் ரோட்டிற்கும், ரிங்ரோட்டில் இருந்து திண்டல் பகுதிக்கும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால், ஜீவா நகர் பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையை செப்பனிட கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை குண்டும் குழியுமான சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.