சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். சூளை அவதான பாப்பையா சாலை, திரு.வி.க.நகர், கொளத்தூர் பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு - குடிநீர் வழங்குவதற்கும் கழக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். புயல் - மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கவும் பருவமழை முற்றுப் பெறும்வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை என்று பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், உடன்பிறப்புகளே! என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.