புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடந்து வந்த நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. நிவர் புயலை எதிர்கொள்வதற்கு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. புயல் காரணமாக, புதுச்சேரியில், பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, நேற்று இரவு 9 மணி முதல் அமலானது. புதுச்சேரி, காரைக்காலில் பேருந்து சேவை, நேற்று மாலையில் இருந்து நிறுத்தப்பட்டு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, 135 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர். மேலும், புயல் வீசும்போது பொதுமக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக பள்ளிகளை பயன்படுத்த உள்ளதால் நவம்பர் 28 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.