நிவர் புயலுக்காக இந்திய ராணுவத்தின் எட்டு குழுக்கள் இன்று சென்னை வருகை... வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் :அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

சென்னை : நிவர் புயலின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் பொது மக்களை முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலின் மையப்பகுதி நகர்ந்த பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மின் கம்பங்கள், பயிர்கள், குடிசை வீடுகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது . இது போன்ற அபாயகரமான நேரங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 233 நிவாரண முகாம்களை 13 லட்சம் பேரை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 987 முகாம்கள் திறக்கப்பட்டு 24 ஆயிரத்து 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயலுக்காக இந்திய ராணுவத்தின் எட்டு குழுக்கள் இன்று சென்னை வர உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் 19 பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை - 2, செங்கல்பட்டு -2,விழுப்புரம் -2, புதுச்சேரி -3, கடலூர் -5 நாகை -2, தஞ்சை 2,காரைக்கால் -1 என மீட்புக் குழுவினர் பணியில் உள்ளனர்.செம்மரம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக 34,500 கன அடி நீர் திறக்க முடியும், என்றார்.

Related Stories: