ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு: மரணத்திலிருந்து மீண்டு வந்தேன்: ராணா உருக்கம்

ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்பு இருந்தது. மரணத்திலிருந்து நான் மீண்டு வந்தேன் என்றார் நடிகர் ராணா. பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த ராணா, இப்போது தமிழ், ெதலுங்கில் உருவாகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சாம் ஜாம் என்ற டிவி நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்குகிறார். இதில் சமீபத்தில் ராணா பங்கேற்றார். அப்போது தனது உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்து ராணா கூறியதாவது: என்னை பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு யூகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்து எனக்கும் அலுத்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். அதனால் என் உடல்நலம் குறித்த வதந்திகள் ‘போர் டாபிக்’. நான் எப்பொழுது ஐதராபாத்தில் இருந்து கிளம்பினாலும் மக்கள் ஏதாவது பேசுகிறார்கள்.

அதற்கு அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புதான் காரணம். இதுபோல் வதந்திகள் வெளிவர, முன்பு நான் உடல் நலத்துடன் இல்லாததுதான் காரணம். வாழ்க்கை வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று ‘பாஸ்’ பட்டன் வந்தது. ரத்த அழுத்தம், இதயத்தை சுற்றி கால்சியம் சேர்ந்துவிட்டது, மேலும் சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. பக்கவாதம் ஏற்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் மரணம் ஏற்பட 30 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையெல்லாம் மீறி, தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமானேன். ஒரு வகையில் மரணத்திலிருந்து மீண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு ராணா கூறியபோது கண் கலங்கினார்.  இதை கேட்டு சமந்தாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும் கண்ணீர் விட்டனர்.

Related Stories: