தடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி? பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை

பழநி: பழநியில் பாஜ சார்பில் நடந்த வேல் யாத்திரையின்போது வின்ச்சில் கும்பலாக சென்றது, தடையை மீறி திருஆவினன்குடி மூலவரை படம்பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டது என சர்ச்சைகள் வெடித்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாஜ சார்பில் நேற்று முன்தினம் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் முருகன், மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழநி மலைக்கோயிலுக்கு அமைச்சர் சென்றபோது, அவருடன் ஏராளமான பாஜவினரும் வின்ச்சில் சென்றனர். கொரோனா காரணமாக தற்போது வின்ச் மற்றும் ரோப்கார் பக்தர்களுக்காக இயக்கப்படவில்லை. இந்நிலையில் வின்ச்சில் பாஜ நிர்வாகிகளை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதேபோல், பழநி கோயில் மற்றும் உபகோயில்களில் செல்போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி படம் பிடிக்க தடை உள்ளது.  ஆனால் திருஆவினன்குடி கோயிலில் மூலவரை மாநில தலைவர் முருகன் வழிபாடு செய்வதுபோல் படம் பிடித்து, பாஜவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவமும் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘‘கட்சி பணிக்காக வந்த பாஜவினரை வின்ச் மூலம் அழைத்துச் சென்றது அதிமுக அரசின்  அப்பட்டமான அரசியல் சார்பு நடவடிக்கை. இதுபோல் தடை செய்யப்பட்ட இடத்தில் மூலவர் தெரியும்படி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இதுதொடர்பாக எடுக்க வலியுறுத்தி முதல்வர், அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கரூரில் முருகன் கைது

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: