லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது

மும்பை: லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், 6 நாட்களிலேயே 53 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது.  தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி, 2,200 கோடி நிதி திரட்ட அனுமதி கோரி ரிசர்வ் வங்கியை நாடியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் கேபிடல் ஆகியவற்றுடன் இந்த வங்கியை இணைக்கும் முயற்சிகளும் ஈடேறவில்லை. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி உட்பட 7 பேரின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணித்தனர். வங்கி வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையையும், லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகும் நிலையை எட்டுவதற்கான அறிகுறிகளையும் காட்டுவதாக கருதப்பட்டது.

 வராக்கடன் அதிகரிப்பால் வங்கியின் நிதி நிலை மோசமான நிலையில், இந்த வங்கியை சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு திடீர் கட்டுப்பாடு விதித்து கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி லட்சுமிவிலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு அல்லது இதர டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது. உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் அல்லது இதர தவிர்க்க முடியாத செலவினங்களுக்காக 25,000க்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.

அதிகபட்சம் 5 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர் நஷ்டங்கள் காரணமாக வங்கியின் சொத்து மதிப்பு குறைந்து வந்துள்ளது. மேற்கண்ட பாதிப்புகளின் எதிரொலியாக, லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் கடந்த 6 நாட்களிலேயே மும்பை பங்குச்சந்தையில் 53 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. இந்த வங்கி பங்குகளின் மதிப்பு தேசிய பங்குச்சந்தையில் 9.88 சதவீதம் சரிந்து 7.30 என கடும் சரிவை சந்தித்தது. அதிலிருந்து 6 நாட்களில் மட்டும் இந்த வங்கி பங்குகள் மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 53.35 சதவீதம் சரிந்துள்ளது.

Related Stories: