7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து செய்யப்பட்ட முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இளங்கலைப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்டதால், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 313 மாணவர்கள் மருத்துவப் படிப்பிலும், 92 மாணவர்கள் பல் மருத்துவத்திலும் சேருவதற்கான வாய்ப்பினைப் பெற உள்ளனர்.

தற்போது, அதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கப் பெற்றும் கட்டணத்தின் காரணமாக மாணவர்கள் யாரும் சேரமுடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக உதவித்தொகை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக அரசே அம்மாணவர்களின் கல்வி, விடுதிக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 7.5% உள் ஒதுக்கீடை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படியும், அதுவரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டனர். உள் ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்ட நிலையில், கலந்தாய்வை நிறுத்திவைத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கலந்தாய்வில் தலையிட முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், பட்டியலில் வரும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் பதிலளித்தனர்.

Related Stories: