பருவமழை முடியும் வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை: வாரீர் உடன்பிறப்புகளே... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு.!!!

சென்னை: வங்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் - மழை  பேரிடரிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் வாரீர் உடன்பிறப்புகளே!” என திமுக தொண்டர்களுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பில், வங்கக் கடலில்  உருவாகியுள்ள ‘நிவர்’ புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், தி.மு.கழக மாவட்ட – ஒன்றிய – நகர - பேரூர் கழக நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற  துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு - குடிநீர் வழங்குவதற்கும் கழக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள  வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுகிறேன். புயல் - மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப்  பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கிடக் கோருகிறேன். பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், உடன்பிறப்புகளே! ‘நிவர்’ புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும் கழகத்தினரின் உதவும் கரங்கள்! வடகிழக்குப்  பருவமழை முற்றுப் பெறும்வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: