வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது: தயார் நிலையில் மீட்புக்குழு.!!!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கத்தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடந்து வட தமிழகத்தின் வழியாக தெலங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26ம் தேதி மும்பை பகுதியில் வலுவிழந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

நிவர் புயல் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளது. சென்னையில் காலை 6 மணிக்கு நிலவரப்படி சராசரியாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: