சென்னை அருகே 470 கி.மீட்டரில் புயல் சின்னம் மையம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்.!!!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதையடுத்து இன்று அது புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கத்தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடந்து வட தமிழகத்தின் வழியாக தெலங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26ம் தேதி மும்பை பகுதியில் வலுவிழந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளது.  சென்னையில் சென்டரல் உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

புயல் சின்னம் நெருங்கிய வரும் நிலையில் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை அருகே 470 கிலோ மீட்டரில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி அருகே 440 கிலோ மீட்டரில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது. புயல் சின்னம் கரையை நோக்கி மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு:  

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்ணை மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: