மனைப்பிரிவு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு

சென்னை:  தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தலைமை அலுவலக மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நகர் ஊரமைப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 2 திட்ட உதவியாளர், 3 இளநிலை உதவியாளர் என மொத்தம் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

மேலும், மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நிலப் பயன் மாற்றம் சம்பந்தமான விண்ணப்பங்களுக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்கும் வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசாணை, சுற்றறிக்கைகளை பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கவும், விண்ணப்பங்களில் விடுபட்டுள்ள விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப மனுதாரருக்கு வாய்ப்பளித்து, தாமதமின்றி அனுமதி வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பா.கணேசன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: