வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ அல்லது வழங்கவோ கூடாது என்று உறுமொழி படிவம் பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் சாதாரண நிலை ஊழியர்கள் வரை தாங்களோ அல்லது தங்கள் மகன் அல்லது மகளுக்கோ வரதட்சணை வாங்குவதோ அல்லது வழங்குவதோ கூடாது. இதற்கான அரசாணையும், வழிகாட்டல்களும் ஏற்கனவே அனைத்துத்துறைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு ஊழியர்கள் தங்கள் திருமணத்தின்போதோ அல்லது தங்கள் மகள், மகன் திருமணத்தின்போதோ வரதட்சணை வாங்குவதும், வழங்குவதும் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதோடு சமீபத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைகளிலும், அமலாக்கப்பிரிவு சோதனைகளிலும் சிக்கும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், நகைகள் மற்றும் ரொக்கம் போன்றவை தங்களின் அல்லது தங்கள் மகள், மகன் திருமணத்தின்போது வழங்கப்பட்ட வரதட்சணை அல்லது அன்பளிப்புகளாகவே வந்ததாக கணக்கு காட்டப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர்.