மதுரை: சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் குறுக்கிட்டு, போலீசார் லஞ்சம் வாங்குவதும்கூட மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே என்று கருத்து தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொலை வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவிப்ேபார் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கிட மத்திய சிறைகளில் சிறப்பு மனநல சிகிச்சை குழு அமைக்க வேண்டியது அவசியம். இக்குழு சென்னை மத்திய சிறையில் மட்டுமே உள்ளது. திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரை கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை குழுவை மத்திய சிறைகளில் அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.