×

தடைகளை உடைத்தெறிந்து விட்டு திமுகவின் தேர்தல் பிரசார பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் தேர்தல் பிரசார பயணம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, அந்தியூர் ெசல்வராஜ், அ.ராசா மற்றும் தயாநிதி மாறன் எம்பி உள்பட திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் என 27 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் திமுகவின் முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்தப் பிரசாரப் பயணத்தை முதற்கட்டமாக கடந்த 20ம் தேதி தொடங்கிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதற்கும், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை காவல்துறைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அதிமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா ஆய்வு என்ற போர்வையில், மாவட்டந்தோறும் முதல்வர் பழனிசாமி, அரசு செலவில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அரசு விழாவை-அரசியல் கூட்டமாகவே நடத்தி வருகிறார். முதல்வரை போலவே, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மாவட்டங்களில் இதனையே பின்பற்றுகிறார்கள்.

அரசு விழாக்களை, அரசியல் விழாக்களாக மாற்றியுள்ள அதிமுக அமைச்சர்கள்-முதல்வர்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் காவல்துறை கைது செய்வதும் இல்லை; பிடித்து வைத்து இரவு வரை சிறைப்படுத்துவதும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது-வரவேற்பு என்ற பெயரில், சென்னை விமான நிலையத்திலும், ஆங்காங்கே சாலைகள் நெடுகிலும் கூடி நின்ற அதிமுகவினரை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அந்த அரசு விழா, தேர்தல் கூட்டணியே அறிவிக்கப்படும் அளவுக்கு அரசியல் விழாவாக, அதிமுக-பாஜ கூட்டணியின் பிரசார தொடக்க விழாவாகவே நடத்தப்பட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில், மக்கள் குடியிருக்கும் அல்லது அவர்கள் தொழில் செய்யும் பகுதிகளுக்கே நேரில் சென்று, அதிமுக ஆட்சியின் அவலங்களையும், அதனால் அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும் கேட்டறிந்து, அந்தக் குறைகளை திமுக தலைவர் முதல்வர் ஆனவுடன் தீர்ப்பார் என்ற உறுதியினையும் அளித்து வருகிறோம்.

இப்படி திமுக சார்பில் சட்டத்திற்கும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மட்டும் காவல்துறை தடை போடுவதும், அந்தப் பிரசாரத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதிமுறைக்கு விடை கொடுத்து, அதிமுகவிற்கு ஒரு நியாயம்-திமுகவிற்கு அநியாயம் என்ற மாறுபாடான நிலையும் அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. ஊழல்களில் ஊறித் திளைத்து-தனது நிலை மறந்து, தன்மானம் துறந்து, மத்திய பா.ஜ.க. எஜமானர்களுக்கு மண்டியிட்டுச் சேவகம் செய்யும் அதிமுக ஆட்சியின் மீது, தமிழக மக்கள் வெறுப்பிலும், கடுங்கோபத்திலும் இருக்கிறார்கள்.

அதனால், திமுகவின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்”என்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் கிடைத்துள்ள மனமுவந்த பேராதரவு-மகத்தான வரவேற்பு, அதிமுக ஆட்சியைப் பெரிதும் மிரள வைத்துள்ளது. அதன் காரணமாகவே, திமுகவின் தேர்தல் பிரசாரத்தைத் தடுக்கும், ஜனநாயகத்திற்குப் புறம்பான, இழிசெயலில், அதிமுக அரசு காவல் துறையைத் தவறான வழி முறைகளுக்குப் பயன்படுத்தி வருவதை, இனியும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து, திமுகவின் பரப்புரைப் பயணம், தன்னெழுச்சியான பொது மக்களின் பேராதரவுடன், தொடரும்.

அதைத் தடுக்க அதிமுக அரசு நினைத்தால், ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்ற ஆணவத்தில் காவல்துறையைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்தால், அதற்குத் துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களைத் தூண்டும் முதல்வர் பழனிசாமியும், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று, இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் எச்சரிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : DMK ,election campaign ,MK Stalin ,meeting ,High Level Task Force , DMK's election campaign to break barriers: MK Stalin-led High Level Task Force
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...