மீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது

பொன்னேரி மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தில் உஷா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஜனவரி 9ம் தேதி 460 சவரன் நகைகள் கொள்ளைபோனது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி சாமுண்டீஸ்வரி ஆகியோரது உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் மேற்பார்வையில், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், இன்ஸ்பெக்டர்கள் மீஞ்சூர் மதியரசன், திருப்பாலைவனம் மகிலா ஆனி கிறிஷ்டி ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம், மாரிமுத்து, பாபு ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த யுவராஜ், போண்டா மணி, முருகன், ரமேஷ், சுரேஷ், வெங்கடேசன், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை பல கடைகளில் அடகு வைத்தது தெரியவந்தது. பின்னர் அடகு கடைகளில் வைக்கப்பட்ட 200 சவரன் தங்க, வைர நகைகளை போலீசார் மீட்டனர். மேலும், கொள்ளை நகைகளை அடகு வைத்ததால் கிடைக்கப்பட்ட ரூ.13.5 லட்சம் ரொக்கம், அந்த பணத்தில் வாங்கிய கார், பைக் ஆகியவற்றையும் கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். தொடர்ந்து, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து உரிமையாளர் உஷாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி அரவிந்தன் பாராட்டினார்.

Related Stories: