வீட்டை உடைத்து கொள்ளை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே வீட்டை உடைத்து நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்போரூர் வேண்டவராசியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (45). சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி தில்லைநாயகி. சிறுதாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தம்பதி, வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: