காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம், இந்திரா நகரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் மோசடி செய்த பெண்ணிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம், இந்திரா நகரில் வசித்தவர்கள் தமிழ்ச்செல்வி, சிவமூர்த்தி, சீனுவாசன், வசந்தா. இவர்கள் கூட்டாக சேர்ந்து மாத சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தினர். இதில் எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 42 பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு கட்டி சுமார் ரூ.3 கோடி வரை கட்டியுள்ளோம். ரூ.5 லட்சத்தில் 17 சீட்டு, ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்தில் 18 சீட்டு வரையும் கட்டி உள்ளோம்.
அவர்களிடம் கட்டிய பணத்தை கடந்த 6ம் தேதி கேட்டபோது, 9ம் தேதி தருவதாக கூறினர். ஆனால், 9ம் அவர்களை தேடி சென்றபோது, இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தக்காகவும், பிள்ளைகள் மேற்படிப்பு மற்றும் மகளின் திருமண செலுவுக்காகவும் சீட்டு கட்டினோம். ஆனால் சீட்டு நடத்தியவர்கள் மோசடி செய்ததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.