பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று மாலை பாஜவின் வேல் யாத்திரை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி பாஜ மாநில தலைவர் முருகன், துணை தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். முன்னதாக வின்ச் நிலையத்தில் பாஜ தொண்டர்கள் தங்களையும் வின்ச்சில் அனுமதிக்க கோரி கேட்டை தாண்டி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் உள்பட 50 பேர் மட்டுமே வின்ச்சில் மலைக்கோயில் சென்றனர்.  

தொடர்ந்து பாஜவினர் தங்களது வேலை பூஜை செய்யுமாறு கூறினர். ஆனால் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. பின்னர் மின்வாரிய திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் முருகன் பேசி முடித்ததும் வேல் யாத்திரையை துவங்க முயற்சித்தனர். உடனே போலீசார் முருகன், அண்ணாமலை உள்பட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். புயலால் யாத்திரை ரத்து: பழநியில் நிருபர்களிடம் முருகன் கூறுகையில், ‘‘புயல் காரணமாக 24, 25 தேதிகளில் நடைபெறவிருந்த நாகை, திருவாரூர், தஞ்சை வேல்யாத்திரை ரத்து செய்யப்படுகிறது’’ என்றார்.

Related Stories: