குளித்தலை: குளித்தலையில சிறுமிக்கு பிறந்து ஆற்றங்கரையில் புதைத்த குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது. காதலனின் பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வேங்காம்பட்டியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்(21) என்பவர் திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி முசிறியில் உள்ள ரஞ்சித்தின் உறவினர் வீட்டில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இது குறித்து தகவல் தெரிந்த சைல்டு லைன் அமைப்பினர், குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமியிடம் புகாரை பெற்ற போலீசார் காதலன் ரஞ்சித் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு பிறந்த குழந்தையை காதலனின் சகோதரர் ரமேஷ்(20) என்பவர் குளித்தலை கடம்பர் கோவில் கடம்பந்துறை ஆற்றங்கரையில் யாருக்கும் தெரியாமல் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து குளித்தலை டிஎஸ்பி சசிதர், தாசில்தார் முரளிதரன் மற்றும் போலீசார் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு நேற்று சென்று குழந்தை சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குளித்தலை மகளிர் போலீசார், ரஞ்சித்தின் பெற்றோர் நல்லதம்பி, சந்திரா, சகோதரர் ரமேஷ் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவான காதலன் ரஞ்சித்தை தேடி வருகின்றனர். ரஞ்சித் மீது மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.