சேலம்: சேலத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கல்வி கட்டணத்தை திமுக ஏற்றது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இன்று காலை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்; நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஆட்சியாளர்கள் ஆட்சியாளர்கள் அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் சேலத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது; திமுக அறிவித்ததால் தானே அரசு கல்வி கட்டணத்தை ஏற்றிருக்கிறது. திமுக ஆளும் கட்சியாக செயல்படுகிறது என்பதை சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். உள்இடஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்தோம் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.