சென்னை: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா வந்து சேர்ந்தார்.
பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது;
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
* உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.
* தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது; தமிழ் மொழிக்கு தலை வணங்குகிறேன்.
* முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது .
* இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது; தலை வணங்குகிறேன்.
* நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகம்.
* தமிழகத்தை போல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை.
* அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது.
* விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.