போபால்: மத்திய பிரதேச இடைத்தேர்தலில் தனது நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பறிக்கப்பட்டதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்து வந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, 15 மாதங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் கவிழ்க்கப்பட்டது. காங்கிரசை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜ.வுக்கு 22 எம்எல்ஏ.க்களுடன் கட்சித் தாவினார். இந்த எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இது தவிர, ஏற்கனவே 6 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.
அதனால், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தனது பிரசாரத்தின்போது ,பாஜ பெண் அமைச்சரவை கமல்நாத் தரக்குறைவாக பேசினார். இதற்காக, அவருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்த பிறகும், மற்ற இடங்களிலும் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசினார். இதனால், அவருடைய நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடியாக பறித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் நேற்று வழக்கு தொடர்ந்தார். இதை அவசர மனுவாக விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளப்பட்டு உள்ளது.