சென்னை: மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சந்தைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் இருந்த லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு பார்சல் இறக்கிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.