சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, சென்னை நீங்கலாக தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அப்போது கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் டாஸ்மாக் விற்பனை நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 டோக்கன் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு மது விற்பனை நடந்தது. மேலும் 3,700 டாஸ்மாக் கடைகள் மட்டுமே முதல்கட்டமாக திறக்கப்பட்டன. அப்போது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இரவு 7 மணி வரையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது. மேலும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் இரவு 8 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்வர் மாதம் இறுதி வரை பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில், தழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பழைய நடைமுறையின்படி இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இரவு 8 மணிவரை செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் இன்று முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.