தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்: பவுர்ணமியையொட்டி நடந்தது

தஞ்சை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரிய கோயில் மூலவரான பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இந்த விழா, தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஐப்பசி பவுர்ணமியான நேற்று, பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கனிகள், 250 கிலோ மலர்கள் அளித்தனர். இதைதொடர்ந்து 1,000 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட அன்னத்தை கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பெருவுடையாருக்கு வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ், உருளைக்கிழங்கு, பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: